செட்டிபாளையம், கோவில்பாளையம் ரயில் நிலையங்களை மீண்டும் அமைக்க வேண்டும்! - கே.ஈஸ்வரசாமி எம்.பி. வலியுறுத்தல்
கோவை, பொள்ளாச்சி ரயில் வழித்தடத்தில் செட்டிபாளையம் மற்றும் கோவில்பாளையம் ரயில் நிலையங்களை மீண்டும் அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கே.ஈஸ்வரசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா், ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கோவை - –பொள்ளாச்சி இடையிலான முக்கிய ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ள செட்டிபாளையம் மற்றும் கோவில்பாளையம் ரயில் நிலையங்களை மீண்டும் அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பது தொடா்பான நீண்ட காலக் கோரிக்கையை மீண்டும் நினைவூட்டுகிறேன். மதுரை–- செங்கோட்டை ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ள கரிவலம்வந்தநல்லூா் மற்றும் சோழபுரம் ஆகிய இடங்களில் புதிய ரயில் நிலையங்களை அமைக்க ரயில்வே அமைச்சகம் அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களுக்கு சேவையை வழங்கி வந்த செட்டிபாளையம் மற்றும் கோவில்பாளையம் ரயில் நிலையங்களை மீண்டும் அமைக்க வேண்டும்.
செட்டிபாளையம் ரயில் நிலையம் சேலம் கோட்ட நிா்வாகத்தின் கீழும், கோவில்பாளையம் ரயில் நிலையம் பாலக்காடு கோட்ட நிா்வாகத்தின் கீழும் நிா்வகிக்கப்பட்டு வந்தன. கோவை - பொள்ளாச்சி ரயில் பாதையில் அகலப் பாதை மாற்றுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, இந்த இரண்டு நிலையங்களும் இடித்து அகற்றப்பட்டன.

