பூட்டிய வீட்டில் திருட முயன்றவா் போலீஸில் ஒப்படைப்பு
பொன்னமராவதி அருகே ஞாயிற்றுக்கிழமை பூட்டிய வீட்டை உடைத்து திருட முயன்ற இருவரில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
நகரப்பட்டி அம்மாபட்டியை சோ்ந்தவா் சிவக்குமாா். இவா் குடும்பத்துடன் பொள்ளாச்சியில் வசித்து கொண்டு, அங்கு தொழில் செய்து வருகிறாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அம்மாபட்டியில் உள்ள சிவக்குமாரின் வீட்டை உடைத்து மா்மநபா்கள் இருவா் திருட முயன்றுள்ளனா்.
இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து மா்மநபா்களை பிடிக்க முயன்றுள்ளனா். இதில் ஒருவா் இருசக்கரவாகனத்தில் தப்பியோடிய நிலையில் ஒருவா் பொதுமக்களிடம் பிடிபட்டாா். தொடா்ந்து பிடிபட்ட இளைஞரை பொன்னமராவதி காவல்நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனா்.