குன்னுார் சதுப்புநில குடிநீரில் அதிகரித்துள்ள... நச்சு கழிவு!:குடிநீர் வடிகால் வாரிய ஆய்வறிக்கையில் பகீர்
குன்னுார்: 'குன்னுார் பெரிய வண்டிச்சோலை மற்றும் 'ஸ்பிரிங்பீல்ட்' பகுதி மக்களின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் உப்புதொட்டி ஊற்றுநீர், மனிதர்கள் குடிப்பதற்கு சற்றும் தகுதியற்றது,' என, குடிநீர் வடிகால் வாரிய ஆய்வறிக்கையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னுார், பெரியவண்டிச்சோலை பகுதியில் உள்ள இயற்கை சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வரும் சட்டவிரோத கட்டுமானங்கள், டாஸ்மாக் குடோன் மற்றும் பிற கழிவுநீர் ஆகியவை நேரடியாக உப்புத்தொட்டி குடிநீர் ஊற்றில் கலந்து வருவதாக பொதுமக்கள் தரப்பில், மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஊட்டியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மாவட்ட குடிநீர் பரிசோதனை ஆய்வகத்திற்கு உப்புதொட்டி நீர் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, 'குடிநீர் தர அளவு விதிகளுக்கு, இந்த நீர் உட்படவில்லை; இது மனித பயன்பாட்டிற்கு தகுதியற்றது,' என்பதும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
