கச்சா எண்ணெய் பைப் லைன்.. திடீரென மூடிய சவுதி அரேபியா.. விலையேற்றத்தைச் சந்திக்கும் உலகம்!
நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியா தனது மிக முக்கியமான கச்சா எண்ணெய் பைப்லைனை மூடியதைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. பைப் லைனில் சேதம் ஏற்பட்டுள்ளதால், அதைச் சீரமைக்கும் வரை, சவுதி அரேபியா மாற்று வழியைப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரில், ஈரானுக்கு ஹவுதி அமைப்பினர் ஆதரவளித்து வருகின்றனர். அவர்கள், செங்கடலில் செல்லும் சரக்கு மற்றும் எண்ணெய்க் கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஈராக் பகுதியிலிருந்து ஏவப்பட்ட பல ட்ரோன்கள், சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் மதினா பிராந்தியங்களில் அமைந்துள்ள பைப்லைனின் இறைப்பி நிலையங்களை (Pumping Stations) தாக்கியுள்ளன. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பைப் லைனை சவுதி அரேபியா தற்காலிகமாக மூடியுள்ளது.
சுமார் 1,200 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த பைப்லைன், சவுதியின் கிழக்குப் பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களிலிருந்து செங்கடல் கரையோரத்தில் உள்ள யான்பு (Yanbu) துறைமுகத்திற்கு நாளொன்றுக்கு 40 முதல் 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யைக் கொண்டு செல்லும் திறன் கொண்டது.


