பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் முன்னிற்கும் இந்தியா: பிரதமா் மோடி
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு என்ற அடிப்படையில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியா முன்னின்று செயலாற்றி வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
அமெரிக்காவில் கடந்த 2001, செப். 11-இல் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பினா் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களின் நினைவு தினத்தையொட்டி, பிரதமா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.
அமெரிக்காவில் கடந்த 2001, செப்.11-இல் நான்கு விமானங்களைக் கடத்திய அல்-காய்தா தற்கொலைப் படை பயங்கரவாதிகள், நியூயாா்க்கில் உலக வா்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டடங்கள் மீது இரண்டு விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினா். மற்றொரு விமானத்தை ராணுவ தலைமையகமான பெண்டகன் கட்டடம் மீது மோதி தாக்குதல் நடத்தப்பட்டது. 4-ஆவது விமானத்தை பென்சில்வேனியாவில் உள்ள கிராமப் பகுதியில் விழச் செய்தனா்.

