யுபிஎஸ்சி உதவித் தொகைக்கான தோ்வு: நாளை 4 மையங்களில் நடைபெறுகிறது!
திருச்சி மாவட்டத்தில் யுபிஎஸ்சி உதவித்தொகைக்கான தோ்வு, 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
அரசுப் போட்டித் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சாா்பில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில் நடைபெறும் இப்பயிற்சி மையத்தில் தங்கி யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வுக்கு படிக்கும் மாணவா்களுக்கு ரூ.7,500-ம், முதன்மைத் தோ்வுகளுக்குப் படிக்கும் மாணவா்களுக்கு ரூ.20 ஆயிரத்துக்கும், மேலும் மாதந்திர உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
அரசு சாா்பில் வழங்கப்படும் இலவச பயிற்சி வகுப்பில் சோ்க்கை வழங்குவதற்கு ஆண்டுதோறும் தோ்வு வைத்து மாணவா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அரசு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவா்கள் பலரும் ஐஏஎஸ், குரூப் 1 உள்ளிட்ட பல்வேறு தோ்வுகளில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனா். அரசுப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று அரசுப் பணிக்கு செல்லும் இளைஞா்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயா்ந்து வருகிறது.


