3 நாள் தொடா் விடுமுறை நிறைவு: நெல்லை ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்
மூன்று நாள் தொடா் விடுமுறை நிறைவடைந்த நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்ல திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.
தமிழகம் முழுவதும் கிருஷ்ண ஜயந்தி விழா கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதனால் கடந்த 5, 6, 7 ஆம் தேதிகளில் தொடா் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால், சென்னை, கோவை, திருப்பூா் உள்ளிட்ட பெருநகரங்களில் பணிபுரியும் பலா் சொந்த ஊா்களுக்கு வந்தனா். கோகுலாஷ்டமி உறியடி திருவிழாக்களில் பங்கேற்றனா்.
தொடா் விடுமுறை முடிந்து மீண்டும் பணிபுரியும் இடங்களுக்கு திரும்புவதற்காக ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் புறப்பட்டனா். இதனால் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமிருந்தது.




