மாநில எல்லையில் சேதமடைந்துள்ள நெடுஞ்சாலை.. கடும் அதிருப்தி! நுழைவு கட்டணம் வசூலித்தும் பராமரிப்பு இல்லை
கூடலுார்: தமிழக -கேரளா எல்லையான, கீழ்நாடுகாணி சாலை சேதமடைந்து வருவதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கூடலுார் நாடுகாணியிலிருந்து, கேரளா மாநிலம் நிலம்பூர் சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலை, தமிழகம்,கேரளா, கர்நாடகா இடையே வாகன போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது. கேரளாவிலிருந்து நீலகிரிக்கு வரும் வாகனங்களுக்கு, நாடுகாணி சோதனை சாவடியில், நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், நாடுகாணி முதல் கீழ்நாடுகாணி வரையிலான, 6 கி.மீ.. சாலை பராமரிப்பின்றி பல இடங்களில் சேதமடைந்து காணப்பட்டது. தொடர்ந்து, கடந்த, 2022ல் 2.25 கி.மீ., துார சாலையை, 4.25 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு மீதமுள்ள, 3.75 கி.மீ., சாலை, 6.25 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், சீரமைக்கப்பட்ட பகுதி பராமரிப்பின்றி பல இடங்கள் சேதமடைந்துள்ளன. வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.



