நெருக்கடிகள், சவால்கள் இருந்தாலும் விவசாயத்தை கைவிட்டதில்லை!
தனி ஆளாக விவசாயத்தில் ஈடுபட்டு, ஆண்டுக்கு 1.20 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டும், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டநாகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, 70 வயதாகும் சவடம்மாள்:
எங்கள் குடும்பத்திற்கு, 19 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஆற்று பாசனத்திற்கு வாய்ப்பில்லாததால் கிணறு, ஆழ்துளை கிணற்றை நம்பி தான் இருந்தேன். நெல், நிலக்கடலை, சோளம் என சாகுபடி செய்து வந்தேன். நிலத்தடி நீர் குறைய ஆரம்பித்ததால், 10 ஆண்டுகளாக 6 ஏக்கரில் மட்டுமே விவசாயம் செய்து வருகிறேன். மீதி நிலத்தை ஆடுகளுக்கு மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வருகிறேன்.
என் கணவர் இறந்து, 35 ஆண்டுகள் ஆகின்றன. தனி ஒருத்தியாக எவ்வளவோ நெருக்கடிகளையும், கடும் சவால்களையும் சந்தித்துள்ளேன். ஆனால், ஒரு நாள் கூட விவசாயத்தை கைவிட வேண்டும் என்று நினைத்ததில்லை. உடல்நிலை சரியில்லை என்றால் கூட, தட்டுத் தடுமாறி பண்ணைக்கு வந்து விடுவேன்.


