தினமும் 500 காகங்களுக்கு உணவு சமூக ஆர்வலரின் மனிதாபிமானம்
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தினமும் 500க்கும் அதிகமான காகங்கள், மயில்கள், அணிலுக்கு சமூக ஆர்வலர் சுடலை 62, மனிதாபிமான அடிப்படையில் உணவளித்து வருவது பாராட்டை பெற்றுள்ளது.
ராமேஸ்வரம் அருகே மெய்யம்புளி சுடலை சேவா பாரதிநகர் செயலராக உள்ளார். இவர் கோயில், பள்ளி வளாகம், கடலோரத்தில் துாய்மைப் பணி செய்யும் மாணவர்கள், இளைஞர்களுக்கு ஐஸ் கிரீம், பிஸ்கட், குடிநீர், டீ உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இவர் தினமும் அதிகாலை 5:00 மணிக்கு எழுந்து கெந்தமாதன பர்வதம் அருகே சம்பை கிராமம் செல்லும் சாலையில் அமர்ந்து 'கா கா...' என கூவி அழைக்கிறார். அவரது சத்தம் கேட்டு 500க்கும் மேற்பட்ட காகங்கள், மயில்கள், அணில்கள் அவரை தேடி திரண்டு வருகின்றன. பின் அவர் கொடுக்கும் குடிநீரில் ஊற வைத்த அரிசி, கார பூந்தி, பிஸ்கட், சோறு ஆகியவற்றை சாலையில் கொட்டியதும் பறவைகள், அணில்கள் உட்கொள்கின்றன. அவரை தவிர வேறு நபர்கள் சுடலை அருகில் சென்றால் அங்கிருந்து காகம், மயில், அணில்கள் எஸ்கேப் ஆகி விடுகின்றன.


