புதைவட மின் கேபிளை மாற்றி அமைக்காமல் வடிகால் கட்டுவதால் எதிர்காலத்தில் சிரமம்
வளசரவாக்கம்: போரூர் முதல் வடபழனி வரையிலான ஆற்காடு சாலையில், புதைவட மின் கேபிளை அகற்றாமல், அதன் மீது மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருவது, பகுதிமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகளின் இந்த அலட்சியப்பணியால், எதிர்காலத்தில் மின் கேபிளில் பழுது ஏற்பட்டால், அதை சீரமைப்பதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
போரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, கிண்டி, கோடம்பாக்கம், அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை, ஆற்காடு சாலை இணைக்கிறது.
இதில், போரூர் முதல் வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார் திருநகர் வரையிலான சாலை, நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பிலும், ஆழ்வார் திருநகர் முதல் கோடம்பாக்கம் வரையிலான சாலை மாநகராட்சி பராமரிப்பிலும் உள்ளது.


