அண்ணா அனுமதித்திருக்க மாட்டார்!
ரூ. 10 கூடுதல் வசூலுக்கு அரசு தரப்பில் இதைக் காரணமாக கூறி முறைகேட்டை மறைத்தாலும் அந்த திட்டமும் இன்னமும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) சில்லறை மதுபான விற்பனைக் கடைகளில் மது பாட்டிலுக்கான அதிகபட்ச சில்லறை விலையைவிட (எம்ஆர்பி) கூடுதலாக ரூ. 10 முதல் 20 வரையில் வசூலிப்பது மட்டுமல்லாது, கேட்கும் மது வகைகளும் கிடைக்காததால் பல ஊர்களில் வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்ந்து வருகிறது.
கடந்த 2003-ஆம் ஆண்டு வரையில் சில்லறை மதுபான விற்பனைக் கடைகளை தனியார் நடத்தி வந்தனர். கடைகளை ஏலம் விடுவதில் கிடைத்த வருமானத்தை அரசு பெற்று வந்தது.
கொள்முதல், நிர்வாகம், விற்பனை என அனைத்தையும் தனியாரே பார்த்துக் கொண்டதால் அதில் அவ்வளவாக புகார்கள் இல்லை. போலி மதுபான விற்பனை குறித்த புகார்கள் மட்டுமே ஆங்காங்கே கூறப்பட்டு வந்தன.


