பண்டிகை,விசேஷ நாட்களில் பஸ் இல்லாமல் தவிப்பு :மாவட்ட தலைநகர்களில் காத்திருக்கும் பயணிகள்
திருப்புத்துார்:பண்டிகை,விசேஷ நாட்களில் பஸ் போக்குவரத்து தட்டுப்பாட்டை போக்க அனைத்து பஸ் ஸ்டாண்ட்களிலும் மாவட்டங்களுக்கிடையேயான போக்குவரத்ததிற்கும் கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பண்டிகை காலம், விடுமுறை நாட்கள், முகூர்த்த நாட்களில் பஸ் போக்குவரத்து பற்றாக்குறை குறித்து சென்னை,மதுரை, திருச்சி போன்ற நகர்களில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் மாவட்டத்திலுள்ள பஸ் ஸ்டாண்ட்களில் அப்போது ஏற்படும் பஸ் போக்குவரத்து பற்றாக்குறை குறித்து பேசப்படுவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பஸ் வசதியின்றி அவதிப்படுவது வெளியே தெரியாமல் போய் விடுகிறது. கூடுதல் கட்டணம் கொடுத்து ஆட்டோ,வேன்களில் சென்று சமாளிப்பதும், குறித்த நேரத்தில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் குழந்தைகளுடன் பெண்கள் பஸ் ஸ்டாண்ட்களில் தவிப்பதும் தொடர்கிறது.
முன்னர், அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உள்ள மொத்த பஸ்களின் எண்ணிக்கையில் 5 சதவீத அளவில் ஸ்பேர் பஸ் காத்திருக்கும். நல்ல நிலையில் ஓடத்தயாராக உள்ள அந்த பஸ்களை, போக்குவரத்தின் போது பழுதான பஸ்களுக்கு மாற்றாகவும், விசேஷ காலங்களில் சிறப்பு பஸ்களாக செயல்படவும் பயன்படுத்தப்பட்டன. அந்த நடைமுறை தற்போது குறைந்து விட்டது. தற்போது ஸ்பேர் பஸ்கள் இருந்தாலும், அவை நல்ல பராமரிப்பில் இல்லை.



