ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!
ஒடிசா காவல்துறையின் சிறப்பு நடவடிக்கையால் 101 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஒடிசா காவல்துறை நடத்திய ‘ஆபரேஷன் அன்வேஷன்’ நடவடிக்கையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒடிசாவைச் சேந்த 101 குழந்தைகள் இரு வாரங்களில் மீட்கப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநில பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு காவல்துறை மூலம் நடத்தப்பட்ட இந்தச் சிறப்பு நடவடிக்கையின் மூலம் 17 மாநிலங்களில் இருந்து ஒடிசாவைச் சேர்ந்த குழந்தைகள் மீட்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கைக்கென 17 குழுக்கள் அமைக்கப்பட்டு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் டிஎஸ்பி தர அதிகாரிகள் மூலம் தனித்தனியே வழிநடத்தப்பட்டனர். இந்தக் குழுக்கள் வெவ்வேறு மாநிலங்களுக்குச் சென்று 10 முதல் 12 நாள்கள் வரை தங்கியிருந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

