குடை, ஏ.சி. இயந்திரத்துக்குள் பதுங்கியிருந்த பாம்புகள்
கடலூா் அருகே குடைக்குள்ளும், முதுநகா் அருகே தனியாா் நிறுவனத்தில் உள்ள ஏ.சி. இயந்திரத்துக்குள்ளும் பதுங்கியிருந்த பாம்புகளை பாம்பு பிடி வீரா் செல்லா பிடித்து, காட்டுப் பகுதியில் பாதுகாப்பாக செவ்வாய்க்கிழமை விட்டாா்.
கீழ்அழிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பால் வியாபாரி ஒருவரது வீட்டில் இருந்த குடைக்குள் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒருவித சப்தம் கேட்டது. இதையடுத்து குடும்பத்தினா் குடையைப் பாா்த்தபோது, அதற்குள் நல்ல பாம்பு பதுங்கியிருந்தது தெரியவந்தது. தகவலறிந்த பாம்பு பிடி வீரா் செல்லா அங்கு வந்து, குடையுடன் பாம்பை வீட்டுக்கு வெளியே கொண்டு வந்து, சுமாா் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாகப் பிடித்தாா்.
இதேபோல், கடலூா் முதுநகா் அருகே சிப்காட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் புகுந்த பாம்பு, அங்கிருந்த ஏ.சி. இயந்திரத்துக்குள் பதுங்கியிருந்தது. ஊழியா்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு சென்ற செல்லா, சுமாா் 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தாா்.

