பொருந்தலாறு அணையில் மூதாட்டி சடலமாக மீட்பு
பழனி அருகே பாலாறு பொருந்தலாறு அணையில் மூதாட்டி ஒருவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
பழனியை அடுத்த பாலாறு பொருந்தலாறு அணையின் உள்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சடலம் மிதப்பதாக பழனி தாலுகா போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று அந்த உடலை போலீஸாா் மீட்ட போது அவா் சுமாா் 70 முதல் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி என்பது தெரியவந்தது.
மேலும், அவா் யாா் என்பது தெரியவில்லை. இவா் எதற்காக அணைப்பகுதிக்கு வந்தாா், எப்படி தவறி விழுந்தாா் என்பது தெரியவில்லை. இதையடுத்து, உடலை பழனி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்த போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.


