சரிந்து வரும் மேட்டூர் அணை நீர்மட்டம்.. சம்பா சாகுபடி பாதிக்கப்படும் அபாயம்!
காவிரி படுகையின் உயிர்நாடியான மேட்டூர் அணை நீர்மட்டம் 88 அடிக்கு கீழ் சரிவதால், இந்தாண்டு சம்பா சாகுபடி பரப்பு 4–5 லட்சம் ஏக்கருக்கு குறையக்கூடும் அபாயம் உருவாகியுள்ளது. கடந்தாண்டு 26.25 லட்சம் ஏக்கரில் நடந்த சம்பா, இம்முறை தண்ணீர் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில், நெல் உற்பத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்து விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரிப் படுகையில் விவசாயத்தைத் தீர்மானிக்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம், தற்போது 88 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது. இதனால், இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்யும் பரப்பு 4 முதல் 5 லட்சம் ஏக்கராகக் கடுமையாகக் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் காவிரி பாசன மாவட்டங்களில் சுமார் 14 லட்சம் ஏக்கர் உள்படத் தமிழ்நாடு முழுவதும் 26.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற்ற சம்பா சாகுபடி, இந்த ஆண்டு போதிய தண்ணீர் இன்றி முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 87.82 அடியாகவும், நீர் இருப்பு 50.19 டி.எம்.சி. யாகவும் சரிந்துள்ளது.


