திருச்சியில் 2-வது தலைநகரம் அமைப்பது தென்மாவட்டங்களுக்குப் பலன் தரும்: துரை வைகோ எம்பி
திருச்சியில் இரண்டாவது தலைநகரம் அமைப்பது தென்மாவட்டங்களுக்கு பெரிதும் பலன் தரும் என மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தாா்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி கே. கள்ளிக்குடி ஊராட்சியில், எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை சனிக்கிழமை திறந்துவைத்த அவா் மேலும் கூறியதாவது: அவசரகால சட்டம் மற்றும் மிசா என்பது ஒரு வரலாற்றுப் பிழை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அன்றைய காலகட்டத்தில் அரசியல் காரணங்கள் மட்டுமின்றி, பொது அமைதிக்கு ஊறு விளைவித்தவா்கள் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவா்களும் கைது செய்யப்பட்டனா். ஆனால், சில அரசியல் ஆளுமைகள் மீது அது புனையப்பட்டதாகவும் இருந்தது.
திராவிட இயக்கத்தைப் பொருத்தவரை, வைகோதான் தமிழகத்தில் மிசா சட்டத்தில் முதலில் கைதானவரும், கடைசியாக விடுதலையானவரும் ஆவாா். தற்போது தேவையின்றி எழுந்துள்ள மிசா விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

