தடுக்கப்படுமா?
தென்பெண்ணை ஆற்றில் ஏற்படும் திடீர் வெள்ள சேதம்... துறிஞ்சலாற்றை பொதுப்பணித்துறை கண்டுகொள்ளுமா?
திருக்கோவிலுார்: தென்பெண்ணை ஆற்றில் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் வெள்ளத்தை கண்காணித்து சேதத்தை தடுக்க நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர். தமிழகத்தின் மிக முக்கிய நதிகளில் ஒன்று தென்பெண்ணை. கர்நாடக மாநிலம், நந்தி துர்க்கா மலையில் உருவாகி, 430 கிலோமீட்டர் பயணித்து, கடலுார் வங்க கடலில் கலக்கிறது. தமிழக எல்லையில் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி, சாத்தனுார் அணையை கடந்துவிட்டால் அதன் பிறகு திருக்கோவிலுார் , எல்லீஸ், சொர்ணாவூர் என சிறு சிறு தடுப்பணைகளை தாண்டி நேராக கடலுாரில் வங்க கடலில் கலந்துவிடும்.
கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெஞ்சல் புயல் வெள்ளப் பெருக்கில் தென்பெண்ணை ஆற்றில் குறிப்பாக சாத்தனூர் அணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு ஒரு லட்சத்து 68 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. அணையின் கீழ் பகுதியில், கல்வராயன் மலையில் இருந்து உருவெடுக்கும் முஷ்குந்தாநதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உருவெடுக்கும் துரிஞ்சலாறு உள்ளிட்ட பல கிளை நதிகளில் இருந்து தண்ணீர் வந்து சேர்ந்தது. இதன் காரணமாக திருக்கோவிலுார் அணைக்கட்டை வினாடிக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான கன அடி நீர் கடந்து சென்றது. இதேபோல் கடந்த 2022 ம் ஆண்டிலும் தென்பெண்ணையில் வெள்ளம் ஏற்பட்டு, துறிஞ்சலாறு சங்கமிக்கும் இடமான மணம்பூண்டி, தேவனுார்,, அரகண்டநல்லுார் என பல ஊர்களில் வெள்ளம் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

