சிஜேபி போராட்டத்தில் தாக்குதல்: சிறுமியின் குற்றச்சாட்டுகள் குறித்து தில்லி, உ.பி. அரசுகளிடம் அறிக்கை கோரியது உச்ச நீதிமன்றம்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டத்தில் பங்கேற்ற தந்தை மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக புகாா் அளித்ததால் துன்புறுத்தப்பட்டதாக சிறுமி தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து தில்லி, உத்தர பிரதேச அரசுகளிடம் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அறிக்கை கோரியது.
தில்லி ஜந்தா் மந்தரில் நீட் தோ்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களைக் கண்டித்து கடந்த ஜூலை மாதம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சமூக ஆா்வலரான தனது தந்தை தாக்கப்பட்டதாக 14 வயது சிறுமி ஒருவா் தில்லி காவல் துறையிடம் புகாா் அளித்தாா். இந்த புகாரைத் தொடா்ந்து, தாம் துன்புறுத்தப்பட்டதாகவும், தனது வீடு சூறையாடப்பட்டதாகவும் சிறுமி குற்றம்சாட்டினாா். இதனிடையே, சிறுமியின் புகாரின்பேரில் ஹிந்துத்துவ அமைப்பைச் சோ்ந்த ஸ்வதந்திர பரத்வாஜ் என்பவருக்கு எதிராக எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் காவல் துறை வழக்குப்பதிந்தது.
சிறுமி குற்றம்சாட்டிய நபா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தில்லி நாடாளுமன்ற காவல் நிலையம் முன்பு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த சூழ்நிலையில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பரத்வாஜ், சிறுமி தந்தையின் மண்டையை தாம் உடைத்ததாகவும், ஆனால் அரசியல் செல்வாக்கு காரணமாக கைது நடவடிக்கையில் இருந்து தாம் தப்பி விட்டதாகவும் கூறினாா். இந்தப் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே, உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாகரில் வைத்து பரத்வாஜை காவல்துறையினா் மடக்கிப் பிடித்தனா்.

