செயற்கை கருத்தரித்தல் முறையில் பிறந்தது ‘பத்ரி’ இளங்கன்று
புதுடில்லி: உத்தரகண்டைச் சேர்ந்த பாரம்பரிய, ‘பத்ரி’ மாட்டு இனத்தை பாதுகாக்கும் வகையில், செயற்கை கருத்தரித்தல் முறையில், அதே இனத்தைச் சேர்ந்த பெண் கன்றுக்குட்டி பிறந்துள்ளது.
உத்தரகண்டைச் சேர்ந்த பாரம்பரிய மாட்டு இனம் பத்ரி. மலைப்பாங்கான நிலப்பரப்பிற்கு ஏற்ப, சிறிய மற்றும் உறுதியான உடலமைப்பு கொண்ட இந்த மாடுகள், உத்தரகண்டின் மாநில விலங்காக அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. இமயமலைப் பகுதியில் உள்ள மூலிகைகளை மேய்வதால், இவற்றின் பால் மற்றும் நெய் அதிக மருத்துவ குணம் கொண்டவையாக கருதப்படுகின்றன.
பத்ரி இன மாடுகள் அழிந்து வரும் சூழலில், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க விஞ்ஞானிகளின் ஆலோசனையை உத்தரகண்ட் அரசு நாடியது. அவர்களின் ஆலோசனைப்படி, ஐ.வி.எப்., எனப்படும் செயற்கை கருத்தரித்தல் முறையில், பத்ரி இன மாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.


