குடிநீர் திருட்டை தடுக்க 456 இடங்களில்... ஸ்மார்ட் மீட்டர்!:ரூ.45 கோடியில் பொருத்துகிறது வாரியம்
சென்னை: சென்னையில் குடிநீர் திருட்டை தடுக்கவும், அனைத்து வீடுகளுக்கும் சீரான குடிநீரை வினியோகிக்கவும், 45 கோடி ரூபாயில், 456 இடங்களில் 'ஸ்மார்ட் மீட்டர்' கருவி பொருத்தும் பணியில், குடிநீர் வாரியம் ஈடுபட்டுள்ளது. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்ததும், எந்த பகுதியில் எவ்வளவு குடிநீர் செல்கிறது, அனைத்து இணைப்புகளுக்கும் முறையாக சென்றடைகிறதா என்பதை துல்லியமாக கண்டறிந்து, குறைபாடுகள் சரி செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மக்களுக்கு தேவையான குடிநீர் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட ஏரிகளில் இருந்தும், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்தும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குடிநீர் வாரியம் சார்பில், 8.20 லட்சம் இணைப்புகள் மற்றும் லாரிகள் வாயிலாக தினமும், 125 கோடி லிட்டர் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக, 6,650 கி.மீ., நீள குழாய்கள், 143 பகிர்மான நிலையங்கள், 1 லட்சம் முதல் 60 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய 120 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் வழங்கப்படும் குடிநீர், அனைத்து பகுதிகளுக்கும் சீராக சென்றடைவதில் சிக்கல் உள்ளது.



