வில் வளைத்த விநாயகர்
அற்புத வடிவாகத் திகழும் வில் வளைத்த விநாயகப் பெருமான் பற்றி...
தமிழ்நாட்டில் உள்ள பழைய ஜமீன்களில் உடையார்பாளையமும் ஒன்று. இதை ஆட்சி செய்த பாளையக்காரர்கள் தமிழிலும், வடமொழியிலும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இவர்கள் "கச்சி' என்னும் அடைமொழியை உடைய பெயரையும், "காலாட்கள் தோழ உடையார்' என்னும் பட்டப் பெயரையும் பெற்று விளங்கினர். "தமிழ்த் தாத்தா' எனப் போற்றப்படும் உ.வே.சாமிநாதையர் குடும்பத்தினர் உடையார்பாளையத்தின் ஆதரவைப் பெற்றனர்.
கங்கைகொண்ட சோழபுரம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பனந்தாள் போன்ற கோயில்களில் சிறப்பான வழிபாட்டுக்கும் விழாக்களுக்கும் பாளையக்காரர்கள் தானம் அளித்திருக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது. உடையார்பாளையத்தில் பழைமையான கோயில் உள்ளது. பத்ராண்யம், முற்கபுரி போன்ற சிறப்புப் பெயர்களும் கொண்ட இத்தல இறைவன் "பயறணி நாதர்' எனவும், இறைவி "நறுமலர் பூங்குழல் நாயகி' எனவும் அழைக்கப்படுகின்றனர். கோயிலுக்குச் செல்லும் வழியில் கோபுர வாயிலுக்கு முன்னர் பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய இந்தக் கோயிலில் விநாயகர் "வில் வளைத்த விநாயகர்' என அழைக்கப்பட்டு வழிபடப்படுகிறார்.

