கேரளத்துக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கோவை போத்தனூா் ரயில் நிலையத்தில் இருந்து கேரளத்துக்கு ரயில் மூலமாக கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி கேரளத்துக்கு ரயில்கள் மூலம் கடத்தப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, கோவை ரயில்வே பாதுகாப்புப் படையின் உதவிப் பாதுகாப்பு ஆணையா் சந்திரமோகன் உத்தரவின்பேரில், போத்தனூா் ரயில் நிலையத்தில் புதன்கிழமை சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
போத்தனூா் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான ரயில்வே பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை பல்வேறு ரயில்களில் சோதனை மேற்கொண்டனா். அப்போது சில ரயில்களின் பொதுப் பெட்டிகளில் இருக்கைகளுக்கு அடியிலும், பல்வேறு பகுதிகளிலும் கேட்பாரற்றுக் கிடந்த மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை சோதனை செய்தபோது, அதில் மொத்தமாக 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, மேல் நடவடிக்கைக்காக கோவை குடிமைப்பொருள் வழங்கல் துறையின் பறக்கும் படை சிறப்பு வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.


