நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் கணக்கில் வராத ரூ. 5 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல்
தில்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் ரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து தில்லி அரசின் சரக்கு மற்றும் சேவை வரி துறையினா் நடத்திய சோதனையில், 25 டன் செப்புக் கழிவுகள் உள்பட கணக்கில் வராத சுமாா் 50 டன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு சுமாா் ரூ.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் ரேணிகுண்டாவில் இருந்து புறப்பட்ட ரயில் மூலம் இந்தச் சரக்குகள் நிஜாமுதீன் ரயில் நிலையத்தை வந்தடைந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
உரிய விற்பனை ரசீதுகள் மற்றும் சரக்கு போக்குவரத்து ரசீதுகள் உள்ளிட்ட கட்டாய ஆவணங்களின்றி ரயில் மூலம் இத்தகைய பொருள்கள் சட்டவிரோதமாக தலைநகருக்கு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

