எராட்டோஸ்தனீஸ்: வெறும் ஒரு குச்சியை வைத்து பூமியை அளந்த கிரேக்க அறிஞர்
வெறும் குச்சியை வைத்து பூமியை கிட்டத்தட்ட துல்லியமாக அளந்துவிட்ட கிரேக்க அறிஞர் எராட்டோஸ்தனீஸ் பற்றித் தெரியுமா? அவர் இதைச் சாதித்தது எப்படி?
நிலவியல் முதல் வானியல் வரை அறிவியல் பெரிதும் முன்னேறிய இன்றைய காலத்திலும், பூமி உருண்டையானது என்பதை நம்ப மறுக்கும் சிலர் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் கிமு 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைரீனை சேர்ந்த கிரேக்க அறிஞர் எராட்டோஸ்தனீஸ் (கிமு 276–194), ஒரு குச்சியை மட்டுமே பயன்படுத்தி பூமியின் கோள வடிவம் குறித்து ஏற்கெனவே நிலவிய கருத்தை கணித ரீதியாகச் சோதித்ததுடன், பூமியின் சுற்றளவையும் குறிப்பிடத்தக்க துல்லியத்துடன் கணக்கிட்டார்.
எராட்டோஸ்தனீஸின் கணக்கீட்டுக்கு அடிப்படையாக இருந்தது கோடை கதிர் திருப்பம் (Summer Solstice) என்ற முக்கியமான ஒரு வானியல் நிகழ்வு. அதாவது, பூமியின் துருவங்களில் ஒன்று சூரியனை நோக்கி அதிகபட்சமாகச் சாய்ந்திருக்கும் நாள்.
அலெக்சாண்ட்ரியா நூலகத்தின் இயக்குநராகப் பணியாற்றியபோது, எகிப்தின் தெற்குப் பகுதியிலுள்ள சயீன் நகரத்தில் (இன்றைய அஸ்வான்), கோடைக் கதிர் திருப்ப நாளில் நண்பகல் நேரத்தில் சூரியன் தரைக்கு முற்றிலும் செங்குத்தாக, அதாவது உச்சியில் (zenith) இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்த ஓர் அறிவியல் கையெழுத்துப் பிரதியை எராட்டோஸ்தனீஸ் கண்டார். அப்போது சூரிய ஒளி ஒரு கிணற்றின் அடிப்பகுதியை நேரடியாகச் சென்றடையும் அளவுக்கு செங்குத்தாக இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

