நிறம் மாறும் சினிமா - 7 | அண்ணா – கலைத்துறையில் தம்பிகளை உருவாக்கிய தளபதி!
முற்றிலும் மாறானதாக இருந்த அண்ணாவின் கண்ணோட்டம்
தந்தை பெரியார் ஒரு மாபெரும் சிந்தனையாளராகவும் போராளியாகவும் இருந்தாலும் கலை மற்றும் இலக்கியம் குறித்து விலகல் பார்வை கொண்டவராகவே இருந்தார். கலையும் இலக்கியமும் சாதியம், ஆணாதிக்கம் போன்ற பாகுபாடுகளுக்கு எதிரானதாகவும் பகுத்தறிவு கொண்டவையாகவும் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் அவர் காலத்திய தமிழ்ப்பண்டிதர்கள் எழுத்துச்சீர்திருத்தத்தைக்கூட ஏற்க மறுத்தவர்களாக இருந்தார்கள். எனவே பெரியாருக்கு கலை, இலக்கியவாதிகள் மீது இத்தகைய விலகல் கண்ணோட்டம் ஏற்பட்டது. ஆனால் அண்ணாவின் கண்ணோட்டமோ, பெரியாரின் கண்ணோட்டத்துக்கு முற்றிலும் மாறானதாக இருந்தது.
கருத்தியலைப் பரப்ப கலையையும் இலக்கியத்தையும் ஆயுதங்களாகப் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணிய அண்ணாவுக்கு கலை, இலக்கியத்தின் ஆற்றல் தெரிந்திருந்தது. அதனால் திராவிட இயக்க இதழ்களில் தொடர்ந்து கலை, இலக்கியம் குறித்து எழுதினார். திராவிட இயக்க மேடைகளில் தொடர்ந்து கலைஞர்களைப் பயன்படுத்தினார்.

