'பெரியார், அம்பேத்கர் பெயர்களை தூக்கும் அதிகாரிகள்- தவெக ஆட்சியில் நடப்பது அதிகாரத்துவ கொட்டமா?'- விசிக இசையமுதன் விளக்கம்
தமிழகத்தில் புதியதாக அமைந்துள்ள தவெக ஆட்சியில், திராவிட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளங்களாகத் திகழும் சமூகப் போராளிகளின் பெயர்கள் மற்றும் கொள்கைகள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகக் கூட்டணிக் கட்சிகளே குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளன. குறிப்பாகச் சட்டமன்றக் குறிப்புகள் மற்றும் அரசாங்க ஆவணங்களில் இருந்து தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மற்றும் அண்ணல் நேரு ஆகியோரின் பெயர்கள் விடுபட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியில் இருக்கும் முதலமைச்சரை விடச் சில குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகளே ஒட்டுமொத்தப் பவரையும் கையில் வைத்துள்ளனரா என்ற கேள்விகள் எழுந்துள்ள வேளையில், இதுகுறித்து நக்கீரன் டிவிக்கு விசிக கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநிலச் செயலாளர் இசையமுதன் கொடுத்த சிறப்பு நேர்காணலில் கூறுகையில், "எங்களது கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் மற்றும் இடதுசாரித் தோழர்கள் சட்டமன்றத்தில் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு மிகவும் நியாயமானது. தவெக ஆட்சிப் பொறுப்பேற்று தற்போது வெறும் 110 நாட்களே ஆகின்றன. இது முற்றிலும் ஒரு புதிய அரசாங்கம் என்பதால், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் உயரதிகாரிகள் காட்டும் வழியில்தான் தற்போதைய ஆட்சியாளர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
துரதிர்ஷ்டவசமாக, அந்த அதிகார வர்க்கத்தில் அமர்ந்திருக்கும் சில சாதி இந்துக்கள், தங்களின் ஆதிக்க மனப்பான்மையால் முரண்பாடுகளை ஏற்படுத்துகிறார்கள். திமுக ஆட்சிக் காலத்தில் கூட, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பது போன்ற ஒரு சிலையைத் திறப்பதற்கு இந்த அதிகாரத்துவ வர்க்கம் பல முட்டுக்கட்டைகளைப் போட்டது. அதையேதான் இப்போதும் தவெக அரசில் உள்ள அதிகாரிகளும் தொடர்கிறார்கள். இதைக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடதுசாரிகளும் வன்மையாகக் கண்டித்து, 'உங்களுக்கு இந்த மக்கள் விரோத அதிகாரிகள் வேண்டுமா அல்லது மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் வேண்டுமா?' என்று அவையிலேயே பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
