காலி குடங்களுடன் அலைமோதும் மக்கள்... தண்ணீர்... தண்ணீர்!:குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு எப்போது?
- நமது நிருபர் குழு -: உடுமலை, பொள்ளாச்சி பகுதி கிராமங்களில், காலிக்குடங்களுடன் மக்கள் காத்திருக்கும் போது,
உடுமலை, பொள்ளாச்சி பகுதி கிராமங்களில், காலிக்குடங்களுடன் மக்கள் காத்திருக்கும் போது, குடிநீர் திட்டங்களின் பிரதான குழாய் உடைந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது; குடிநீர் வடிகால் வாரியம் அலட்சியம் தவிர்த்து வினியோகத்தை சீராக்க வேண்டும். திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்தில், 72 ஊராட்சிகள் உள்ளன. தளி, கணியூர், மடத்துக்குளம், குமரலிங்கம், சங்கராமநல்லுார் பேரூராட்சிகளுக்கும், திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு, குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக, 5 குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இத்திட்டங்கள் வாயிலாக, அணையிலிருந்து நாள்தோறும், 3.90 கோடி லிட்டர் குடிநீர் எடுத்து, வினியோகம் செய்ய முடியும்.
இந்த குடிநீர் திட்டங்களின் சுத்திகரிப்பு மையங்களுக்கு, 24 மணி நேர தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு, அணையில் திருப்தியான நீர் இருப்பு பராமரிக்கப்படுகிறது. ஆனாலும், பல ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்க திட்ட பராமரிப்பில் காட்டப்படும் அலட்சியமே காரணமாகும். குறிப்பாக, குடிநீர் திட்டங்களின் பிரதான குழாய் உடைப்பை சீரமைப்பு இழுபறியாக நடக்கிறது.
வறட்சியால், உள்ளூர் நீராதாரமான போர்வெல்களில் நீர்மட்டம் சரிந்துள்ளதால், குடிநீர் திட்டங்களில் வினியோகம் பாதிக்கும்போது, போர்வெல் தண்ணீரையும் வினியோகிக்க முடிவதில்லை. குடிநீர் திட்டங்களின் பிரதான குழாய்கள், 20க்கும் மேற்பட்ட இடங்களில் அடிக்கடி உடைந்து குடிநீர் வீணாகிறது. இந்த உடைப்புகளை சீரமைக்க பல வாரங்களாகிறது.



