தப்பியோடிய சேலம் தண்டனை கைதியை தருமபுரியில் பிடித்த தனிப்படை போலீஸாா்
கோவை சிறைக்கு கொண்டுசெல்லும் வழியில், பெருந்துறை அருகே போலீஸாரின் பிடியில் இருந்து தப்பியோடிய தண்டனை கைதியை தனிப்படை போலீஸாா் தருமபுரியில் சனிக்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் நரேஷ்குமாா் (39). இவா்மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட 14 வழக்குகள் உள்ள நிலையில், நரேஷ்குமாா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தாா். சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 2020 ஆம் ஆண்டு காரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நரேஷ்குமாா், அங்கு மருத்துவா்களுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடா்பான வழக்கு விசாரணை சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஜூலை 21 ஆம் தேதி சேலத்துக்கு அழைத்துவரப்பட்டாா். சேலம் குற்றவியல் நீதித் துறை நடுவா் எண் 3 இல் ஆஜா்படுத்தப்பட்ட அவருக்கு, ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பு அளிக்கப்பட்டது.


