விடுமுறையில் நெரிசலால் திணறும் சென்னை- திருச்சி சாலை! 8 வழிச்சாலையாக மாறுமா? தீர்வு என்ன?
பண்டிகை காலம், தொடர் விடுமுறை நாட்கள் என்றாலே சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களால் நிரம்பி வழிகிறது, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை. செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி வழியாக செல்லும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கான முக்கிய இணைப்பாக உள்ளது.
சாதாரண நாட்களில் சுமார் 35 ஆயிரம் வாகனங்கள் செல்லும் நிலையில், வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை 95 ஆயிரமாகவும், பண்டிகை காலங்களில் சுமார் ஒன்றரை லட்சமாக அதிகரிப்பதாகவும் போக்குவரத்து மேம்பாட்டு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் 6 மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை 10 மணி நேரம் வரை பயணிக்க வேண்டிய நிலையால் பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்திப்பது தொடர்கதையாகிறது.
இதன் தாக்கம் சென்னையில் இருந்து திருச்சி வரை அமைந்துள்ள சுங்கச்சாவடிகளிலும் வெளிப்படுகிறது. பரனூர், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திருமாந்துறை உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் பண்டிகை நாட்களில் வாகன எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.




