கிழக்கு கடற்கரை சாலை, கிராம சாலையை ஆக்கிரமிக்கும் முள் மரங்கள்
திருப்புல்லாணி: ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி வழியாக கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி வரை உள்ள 65 கி.மீ., கிழக்கு கடற்கரை சாலை முள் மரங்களின் ஆக்கிரமிப்பால் தொடர் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சீமைக் கருவேல மரங்களின் பாதிப்பால் மூன்றாண்டுகளில் நுாறுக்கும் அதிகமான விபத்துகள் நடக்கின்றன. குறிப்பாக ஊராட்சிகளில் உள்ள கிராம சாலைகளில் இரு புறங்களிலும் சீமைக் கருவேல மரங்கள் தங்களது ஆக்கிரமிப்பை துவக்குவதால் எதிரே வரக்கூடிய வாகனங்கள் வருவது கூட தெரியாமல் அடிக்கடி தொடர் விபத்து ஏற்படுகிறது.
முன்பு சாலை பணியாளர்கள், சம்பந்தப்பட்ட ஊராட்சியில் உள்ள பணியாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் சாலையோர மரங்களை அகற்றி சுத்தம் செய்யும் செயல்பாடு நடந்தது. தற்போது கடந்த ஆறு மாதங்களாக சாலையோர மரங்களை அகற்றுவதற்கு கூட மனம் இல்லாத நிலையில் அதிகாரிகள் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


