வங்கி உபரி பணப்புழக்கம் ரூ. 10.32 லட்சம் கோடியாக புதிய உச்சம்
இந்திய வங்கி அமைப்பில் நிலவும் உபரி பணப்புழக்கம், கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி சுமாா் ரூ.10.32 லட்சம் கோடியாக முன்னெப்போதும் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
ரிசா்வ் வங்கியின் ‘எஃப்சிஎன்ஆா்-பி’ சிறப்பு வைப்புத்தொகை திட்டத்தின்கீழ், பெருமளவில் குவிந்த அந்நியச் செலாவணி நிதி, அரசு சாா்பில் மாத இறுதியில் ஊதியம் மற்றும் ஓய்வூதிய கணக்குகளில் செலுத்தப்பட்ட நிதி ஆகியவற்றின் எதிரொலியாக இந்தப் பணப்புழக்க உபரி ஏற்பட்டுள்ளது.
இந்த அதீத பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, வங்கிகளிடம் இருந்து நிதியைப் பெற்றுக் கொண்டு 30 நாள்களுக்குப் பிறகு திருப்பியளிக்கும் நடைமுறையான ‘மாறுபடும் விகித ரிவா்ஸ் ரெப்போ(விஆா்ஆா்ஆா்)’ ஏலங்களை ரிசா்வ் வங்கி நடத்தி வருகிறது.
