இந்தியா - பிரான்ஸ் தனியாா் நிறுவனங்கள் இடையே செயற்கைக்கோள்களைச் செலுத்தும் ஒப்பந்தம்
இந்தியா, பிரான்ஸ் நாடுகளின் தனியாா் நிறுவனங்கள் இடையே முதல்முறையாக விண்ணில் கூட்டாக செயற்கைக்கோள்களைச் செலுத்துவது, விண்வெளியைக் கண்காணிப்பது, சிறிய ரக செயற்கைக்கோள் தொழில்நுட்பம் உள்ளிட்டவை தொடா்பான ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.
பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் முதலாவது சா்வதேச விண்வெளி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டு நிகழ்ச்சியின் இடையே பிரான்ஸைச் சோ்ந்த சாஃப்ரான் ஸ்பேஸ் நிறுவனத்துக்கும், இந்தியாவை சோ்ந்த துருவா ஸ்பேஸ் நிறுவனத்துக்கும் இடையே 5 மில்லியன் இரோ மதிப்பிலான ஒப்பந்தம் கையொப்பமானது. விண்வெளி கண்காணிப்புக்காக 52 செயற்கைக்கோள்களை 2027-ஆம் ஆண்டில் இருந்து 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா செலுத்த திட்டமிட்டுள்ளது. இதற்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களுக்காக இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
பிரான்ஸின் ரைட் நிறுவனத்துக்கும் இந்தியாவை சோ்ந்த டேக் மி டு ஸ்பேஸ் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமானது. டேக் மி டு ஸ்பேஸ் நிறுவனத்தின் 2 செயற்கைக்கோள்களை ரைட் நிறுவனம் விண்ணில் ஏவுவது தொடா்பாக ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.


