யார் சொல்வதோ... பதில் யார் சொல்வதோ...
இளம்தென்றல் தவழ்ந்து வருவதைப் போல இதமான குரல், தேனின் சுவையைப் போல காதுக்கு சுவை தரும் வீணைக்குரல் என மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த பாடகி ஜாஸ்மின் பாத்திமாவைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
எப்போதும் சிரிக்கும் முகத்தில், பாடும் போது குரல்... காந்தமாய் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கிறது. 12 வயதில் இருந்தே பாடிக்கொண்டிருப்பதால் குரலின் மென்மை பேச்சிலும் ஒலித்தது.
அப்பா ரஷீத் அலி (ரஞ்சித்) மேடைப்பாடகர். சினிமாப்பாடல்கள் பாடுவார். இரண்டாண்டுகள் கர்நாடக இசை கற்றுக் கொண்டேன். பின் சினிமாப் பாடல்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். டிவி இசைநிகழ்ச்சி போட்டியில் 'டைட்டில் வின்னர்' ஆன அனுபவம் இசையை என்னுள் நிறைத்தது. 12 வயதில் துவங்கிய மேடைப்பயணத்தில் தற்போது ஆயிரம் நிகழ்ச்சிகளைத் தாண்டி பாடி வருகிறேன்.


