12.9.1976: த.நா.வுக்கு கூடுதல் நீர் வழங்க கர்நாடகத்திடம் பிரதமர் கூறலாம்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
சென்னை, செப். 11 - காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் நெற்பயிரைப் பாதுகாப்பதற்காக கர்நாடக மாநிலத்திலிருந்து இன்னும் கூடுதலாக தண்ணீர் விடும்படி இம்மாதம் 15ம்தேதி பெங்களூர் செல்லும் பிரதம மந்திரி கர்நாடக மாநில அரசிடம் வற்புறுத்தக் கூடும் என்று இன்று சென்னையில் மத்திய நிதி அமைச்சர் சி. சுப்ரமணியம் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வறட்சி நிலை, காவிரி பாசனப் பகுதிகளில் நெல் உற்பத்தி பாதிக்கப்படாமலிருக்கத் தேவைப்படும் நீர் ஆகியவை குறித்து தமிழகம் வரும் பிரதமரிடம் கவர்னரும், அவரது ஆலோசகர்கள், தலைமைச் செயலாளர் ஆகிய அதிகாரிகள் நிலைமைகளை எடுத்துச் சொல்வார்கள். கர்நாடக அரசிடம் பேசி மத்திய சர்க்கார் தலையிட்டு தண்ணீர் பெற்றுத் தரும்படி பிரதமரிடம் கோருவார்கள். கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதை தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக் காட்டி நமது நிலை, தேவையை பிரதமரிடம் விளக்கி, இடைக்கால உதவியாக பயிரைக் காப்பாற்ற கர்நாடக அரசு தண்ணீர் கொடுத்துதவ இயன்றதைச் செய்யும்படி கோருவோம் என்றார். ...



