பரசுராமர் நிறுவிய பகவதி அம்மன்
இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் முக்கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது, சிறப்புமிக்க அருள்மிகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்.
அம்மனின் சிலை பரசுராமரால் நிறுவப்பட்டு, கோயிலும் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. பாண்டியர்கள் ஆட்சியின்போது கோயில் புதுப்பிக்கப்பட்டது. தமிழ், மலையாளம், சம்ஸ்கிருதம் என மூன்று மொழிகளிலும் தலபுராணம் கொண்ட கோயில்.
அசுரர்களின் அரசன் பாணாசுரன், உலக மக்களுக்கும், தேவர்களுக்கும் பெருந்துன்பம் விளைவித்து வந்தான். அவனை அழிக்க பராசக்தியால் மட்டும் முடியும் என திருமால் மூலம் அறிந்த தேவர்கள், சக்தியை வேண்டினர். அதன்படி கன்னியாகப் பாறையில் தவம் இயற்றினாள். அவளது அழகில் மயங்கிய சிவன் மணம்புரிய விரும்பினார். அதற்கு நாரதர் சூரிய உதயத்துக்கு முன் மணம்புரிய வேண்டும் என நேரம் குறித்தார். கன்னிக்கு மணம் முடிந்துவிட்டால், அசுரனை அழிக்கும் பலம் கிடைக்காது என்பதால், தாணுமாலயன் மணம் முடிக்கும் நாளன்று பொழுதுவிடிவதற்கு முன்பாகவே நாரதர் சேவல் போல் கூவினார். இதனால் பொழுது விடிந்ததாகக் கருதிய சிவன், கன்னியை மணம் புரியாமல் திரும்பிவிட்டார்.
