ட்ரோன்கள் பறப்பதை கண்காணிக்க வருகிறது புதிய அமைப்பு!உருவாகிறது பிரத்யேக கட்டுப்பாட்டு அமைப்பு
புதுடில்லி: நகரங்கள், விவசாய நிலங்கள் மற்றும் தொழில் பகுதிகள் மேலே அதிக எண்ணிக்கையில், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் பறக்க விடப்படும் நிலையில், அவற்றின் போக்குவரத்தை கண்காணித்து நிர்வகிக்க, புதிய தேசிய ட்ரோன் கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வீடியோ பதிவு, நில அளவீடு, பூச்சிக்கொல்லி தெளிப்பு உள்ளிட்ட பணிகளில் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. வணிக ரீதியிலான பொருட்கள் டெலிவரி மற்றும் மனிதர்களை ஏற்றிச் செல்லும் ட்ரோன்களும் பல்வேறு இடங்களில் சோதனை முயற்சியில் உள்ளன. சமீபத்தில், அசாம், நாகாலாந்து ஆகிய மலை மாநிலங்களில், அஞ்சல் துறையே தபால்களை தலைமை அலுவலகத்தில் இருந்து, தொலைதுார மலைகிராம கிளை அலுவலகங்களில் டெலிவரி செய்ய ட்ரோன்களை முயற்சித்து பார்த்துள்ளன.
கடந்த ஜூலையில் உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சருமான நிதின் கட்கரி, நகர மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்தை மாற்றும் வகையில் பறக்கும் சிறிய ரக டாக்சிகளை அறிமுகப்படுத்தும் திட்டம் இருப்பதாக கூறினார். எனவே, இவை அதிகளவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதால், குறைந்த உயரத்தில் பறக்கும் ட்ரோன்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.


