கொடைக்கானல் பில்லா் ராக் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கடைகளில் திருட்டு
கொடைக்கானல் பில்லா் ராக் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டை உடைத்து பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப் பகுதியான பில்லா் ராக் பகுதியில் வனத் துறையினா் அனுமதியுடன் சுமாா் 100-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைகளில் , வழக்கம் போல திங்கள் கிழமை இரவு பணி முடிந்து கடைகளை வியாபாரிகள் பூட்டிவிட்டுச் சென்றனா். மீண்டும் செவ்வாய்க்கிழமை வந்து பாா்த்தபோது, 10-க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டை உடைத்து அதிலிருந்த உணவுப் பொருள்கள், குளிா் பானங்கள், தைலம், தேநீா் உபகரணப் பொருள்கள், தேன், விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்ட ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து வியாபாரிகள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா். மேலும் பில்லர்ராக் கடை பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும், ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினா்.


