கிருஷ்ண ஜெயந்தி விழா: முதல் முறையாக ரூ.2.60 லட்சத்துக்கு ஏலம் போன தேங்காய்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே, கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நடந்த உறியடி பொருட்கள் ஏலத்தில், தேங்காய் ஒன்று, 2.60 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
ராமநாதபுரம் மாவட்டம், புளியங்குடி கிராமத்தில், 44ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி உறியடி உற்ஸவம் நடந்தது. உறிப்பானையில் தேங்காய், 5 எலுமிச்சை பழங்கள், தயிர் ஆகிய பொருட்கள் வைக்கப்பட்டன. அதன்பின், உறியடித்த பொருட்கள் ஏலம் விடப்பட்டன.
புளியங்குடியைச் சேர்ந்த சந்தோஷ்குசார் - பிரியங்கா தம்பதி தேங்காயை, 2.60 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர். இதேபோல், 5 எலுமிச்சை பழங்கள், 3.70 லட்சம் ரூபாய், தார்கம்பு, 45 ஆயிரம் ரூபாய், மஞ்சள் கயிறு, 70 ஆயிரம் ரூபாய், வடம் கயிறு, 65 ஆயிரம் ரூபாய் என, மொத்தம், 8.10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயின.

