தமிழகத்தில் ரூ.779 கோடியில் புதிய மின்சார வாகன ஆலை: அல்ட்ராவயலட் அறிவிப்பு
தமிழகத்தின் ஓசூரில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.779 கோடி முதலீட்டில் புதிய மின்சார இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளதாக பிரபல இருசக்கர மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான அல்ட்ராவயலட் அறிவித்தது.
பெங்களூரில் தற்போது இயங்கி வரும் ஆலைக்கு கூடுதலாக அமைக்கப்படும் இப்புதிய ஆலை, முதல்கட்டமாக ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகனங்களைத் தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். சந்தை தேவை அதிகரிக்கும்போது, உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 5 லட்சம் வாகனங்களாக உயா்த்தும் வகையில் இதன் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய ஆலையின் விரிவாக்கம்மூலம் சுமாா் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று அல்ட்ராவயலட் இணை நிறுவனரும் சிஇஓவுமான நாராயண் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.


