8 ஊராட்சிகளில் கட்டுமான பணிகளுக்கான தடை நீக்கம்!பரந்துார் ஏர்போர்ட் திட்டம் ரத்தால் சலுகை
காஞ்சிபுரம்:பரந்துார் விமான நிலைய திட்டத்தை அரசு கைவிட்டதால், எட்டு ஊராட்சிகளில் நிரந்தர கட்டமான பணிகளுக்கு தடை நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய கட்டடம், சாலைகள் உள்ளிட்ட வசதிகள் நிறைவேறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையின், இரண்டாவது விமான நிலையம், பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு, 12 கிராமங்களில், 5,300 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. இதில், 3,500 ஏக்கர் அரசுக்கு சொந்தமானவை. மற்றவை தனியாருக்கு சொந்தமான விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகள்.
இதில், தனியாருக்கு சொந்தமான 60 சதவீதம் நிலங்களை, தமிழக தொழில் வளர்ச்சி கழகம் கையகப்படுத்தியது. இருப்பினும், பரந்துார் விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக, சில தினங்களுக்கு முன் தமிழக அரசு அறிவித்தது.



