நிலம் என்பது வெறும் மண் அல்ல, உயிர்! நிலம் காக்கும் ஜமாபந்திகள்! நீதியும் நியாயமும் - 4
நிலம் என்பது வெறும் மண்ணல்ல, அதுதான் உயிர், எனவே, மக்கள் தங்கள் நிலத்தைக் காக்க ஜமாபந்தி, வருவாய்த் தீர்வாயங்களைப் பயன்படுத்திக் கொள்வது பற்றி...
நிலம் காக்கும் ஜமாபந்தி, வருவாய்த் தீர்வாயங்கள் - AI - Dinamani
திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மருங்காபுரி அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் பழுவஞ்சி. சங்க காலத்தில் அது ஒரு நாடு. செழித்து விளைந்த பூமி. இன்றைக்கு மானாவாரிக் காடு. அதிகாலைப் பொழுதில் கையில் தூக்குப்போனியுடன் காத்திருக்கும் ஆண்களையும் பெண்களையும் அந்த வழியாகச் திருச்சி செல்லும் போக்கு வண்டிகள் சுமந்து செல்லும். திருச்சி மாநகருக்கு வெளியில் இறங்கிக் காத்திருப்பார்கள். அவர்களைச் சந்தையில் காய்கறிகளைப் பொறுக்கி எடுப்பதைப் போல தரகர்கள் வேலைகளுக்குத் தகுந்தாற்போல் பொறுக்கி எடுத்து அழைத்துச் செல்வார்கள். அதில் கணேசனும் ஒருவர். அத்துக்கூலிக்குத்தான் போவார். ஒரு நாள் வேலை கிடைக்கும். பல நாள்கள் நண்பகல் வரை காத்திருந்துவிட்டு வெறுங்கையோடு வீடு திரும்ப வேண்டும். ஊரில் கணேசனுக்கும் நிலம் இருந்தது. வானம் பொய்த்த காலத்தில் அதில் அவருக்கு எந்த வருமானமும் இல்லை. வேறு வழியின்றிப் பிழைப்பிற்காக நகரத்தில் அத்துக்கூலியாகச் சென்று வந்தார். நிலத்தில் பற்றிப் படர்ந்திருந்த ஒரு தாவரத்தை வேரோடு பறிந்து எறிவதைப் போல, அவரது நிலத்தில் இருந்து ஒருநாள் கணேசன் தூக்கி எறியப்பட்டார். தலைமுறை தலைமுறையாக அனுபவித்த நிலத்தை இழந்துவிட்டார். ஓர் அகதியைப் போல கணேசனின் வாழ்க்கை மாறியிருக்கிறது.


