உலக வரைபடத்தில் மோசடி!!வரைபடக் காலனித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஐநா.?
உலக நாடுகளின் அளவையும், அமைவிடத்தையும் நாம் புரிந்துகொள்ள உதவும் உலக வரைபடத்திலேயே மிகப்பெரிய திரிபு இருப்பதாக பல ஆண்டுகளாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் மெர்கேட்டர் வரைபடம் (Mercator Projection), பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளை அவற்றின் உண்மையான அளவைவிட சிறியதாகவும், வடக்கு மற்றும் துருவப் பகுதிகளை மிகப் பெரியதாகவும் காட்டுகிறது.
இதற்கு மாற்றாக, கடந்த 2018-ம் ஆண்டு வரைபடவியலாளர்கள் நிலப்பரப்புகளின் உண்மையான அளவை மிகவும் துல்லியமாகக் காட்டும் ‘ஈக்வல் எர்த்’ (Equal Earth) வரைபடத்தை உருவாக்கினர். இந்தசூழலில் தான், இந்த வரைபடத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது அதிகரித்திருக்கிறது. இந்தக் கோரிக்கையை முன்னெடுத்து வரும் மேற்கு ஆப்பிரிக்க நாடான டோகோ (Togo), ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில், ஆப்பிரிக்கக் கண்டத்தின் உண்மையான நிலப்பரப்பு அளவை துல்லியமாகக் காட்டும் 'ஈக்வல் எர்த்' உலக வரைபடத்தை சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்வதற்கான தீர்மானத்தை வைத்துள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு ஐநா பொதுச்சபையில் இன்று நடைபெறவுள்ளது. டோகோவின் இந்த முயற்சிக்கு ஆப்பிரிக்க ஒன்றியத்தின் 54 உறுப்பு நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதுகுறித்துப் பேசியுள்ள டோகோவின் வெளியுறவு அமைச்சர் ராபர்ட் டஸ்ஸி (Robert Dussey), ”இந்த விவாதம் ஒரு அரசியல் விவாதம் அல்ல, மாறாக ஒரு அறிவியல் விவாதம். ஏனெனில், அறிவியல் சான்றுகள் உள்ளன. எனவே, நாம் அனைவரும் எதார்த்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.


