வடக்கு வாசல் - 4 | முடிவுக்கு வந்த சோன் நதிநீர்ப் பங்கீடு.. பாஜகவுக்கு சாத்தியமா பீகார் & ஜார்கண்ட்?
கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பீகார் & ஜார்கண்ட் மாநில முதல்வர்கள் இருவரும் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். கடந்த 25 ஆண்டுகாலமாக இரண்டு மாநிலங்களுக்கும் இடையே தீராத பிரச்னையாக இருந்த சோன் நதி நீர்ப் பங்கீட்டிற்கு ஒருவழியாக நிரந்தர தீர்வு எட்டப்பட்டது.
கடந்த காலங்களில் மத்திய நீர் ஆணையம் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் இரு மாநில அதிகாரிகளுடன் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், தீர்வை எட்ட முடியவில்லை. வறட்சிப் பகுதிகளுக்குக் கூடுதல் தண்ணீர் வேண்டும் என ஜார்கண்ட்டும், தன்னுடைய பாசன அளவு குறைந்துவிடும் என பீகாரும் உறுதியாக நின்றதால் உடன்பாடு எட்டப்படவில்லை
கடந்த ஆண்டு ராஞ்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற கிழக்கு மண்டல முதல்வர்கள் கூட்டத்தில் சோன் நதிப் பங்கீடு பற்றியும் பேசப்பட்டது. பின்னர் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் சார்ந்த குழுக்கள் உருவாக்கப்பட்டு, இரு மாநிலங்களிலும் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, நிதிஷ் குமார் முதல்வராக இருந்தபோதே வரைவு தயாராகிவிட்டது.



