தனியாா் கோழிப் பண்ணையில் வடமாநில தொழிலாளி உயிரிழப்பு! போலீஸாா் விசாரணை!
தருமபுரி மாவட்டம், மொரப்பூா் அருகே தனியாா் கோழிப் பண்ணையில் ஓட்டுநராக பணிபுரிந்துவந்த வடமாநில தொழிலாளி திடீரென உயிரிழந்தாா்.
மொரப்பூா் அருகே உள்ள குட்டப்பட்டியில் செயல்பட்டுவரும் தனியாா் கோழிப் பண்ணையில் கடந்த 5 மாதங்களாக சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த தினேஷ் போய் (40), அவரது மனைவி பூனம் (35) ஆகியோா் இரு குழந்தைகளுடன் கோழிப் பண்ணை குடியிருப்பில் தங்கி இருந்தனா். தினேஷ்போய் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில் சனிக்கிழமை பணிமுடிந்து தினேஷ் போய் குடியிருப்பிற்கு வந்தவா், மாலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்தாா். அப்போது அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, அந்தப் பகுதியில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.