இந்த வாரம் கலாரசிகன் - 06-09-2026
ஸ்ரீ பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற திருமுறை மாநாடு-திருமந்திரக் கருத்தரங்கத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன்.
புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனத்துடன் இணைந்து ஸ்ரீ பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற திருமுறை மாநாடு-திருமந்திரக் கருத்தரங்கத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். கவிஞர் தங்கம் மூர்த்தி, புதுக்கோட்டை கம்பன் கழகச் செயலாளர் புதுகை ச.பாரதி தொடங்கி பலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியும், இந்து சமய அறநிலையத் துறையின் திருக்கோயில்கள் ஆகம வழிபாட்டு ஆய்வுக் குழுவின் தலைவருமான மாண்பமை நீதிபதி மெ.சொக்கலிங்கத்துக்கு 'அருள்மொழிச் செல்வர்' என்கிற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார் பேரூர் ஆதீன குருமகா சந்நிதானம் தவத்திரு மருதாசல அடிகளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிக்கொணரப்பட்ட 'திருமந்திர ஆய்வுரைக்களஞ்சியம்' என்ற நூலின் மறுபதிப்பு அந்த மாநாட்டில் வெளியிடப்பட்டது. அதன் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
திலகவதியார் திருவருள் ஆதீனம் தொடங்கப்பட்டதன் வரலாற்றைக் கேள்விப்பட்டபோது வியப்பு மேலிட்டது. அப்போது ஆதீனகர்த்தர்களாக இருந்த பேரூர் சாந்தலிங்க அடிகளாரும், குன்றக்குடி அடிகளாரும் ஆசி வழங்கி உருவாக்கிய ஆதீனம் திலகவதியார்திருவருள் ஆதீனம். ஆன்மிகப் பேச்சாளராக இருந்து சைவ நெறி பரப்பிக் கொண்டிருந்த, சாயிமாதா சிவ பிருந்தாதேவியால் நிறுவப்பட்ட திலகவதியார் ஆதீனம்தான், தமிழகத்தின் முதலாவது பெண் ஆதீனமாகத் திகழ்கிறது.

