வடக்கு வாசல் - 5 | இமாச்சலை இறுக்கும் நிதி நெருக்கடி.. தள்ளாடும் காங்கிரஸ்.. தலைநிமிரும் பாஜக!
டெல்லிக்கு விசித்திர கடிதம் எழுதிய இமாச்சல் முதல்வர்
நடப்பாண்டிற்கான பருவமழை, தென்னிந்தியாவில் வழக்கத்தைவிடக் குறைவு என்றாலும், வட இந்தியாவில் குறிப்பாக எல்லையோர மாநிலங்களில் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளதை ஊடகச் செய்திகள் வாயிலாக கேள்விப்பட்டிருப்போம். வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பெரும்பாலான மாநிலங்கள் தடுமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, டெல்லிக்கு ஒரு விசித்திரமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். தன்னுடைய மாநிலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளின் எண்ணிக்கையை 153லிருந்து 130ஆக குறைத்துவிடுமாறு கடிதத்தில் கேட்டிருந்தார்.
பொதுவாக மாநிலங்கள், அதிகாரிகளின் எண்ணிக்கையைக் கூட்டுமாறு டெல்லிக்கு கடிதம் எழுதுவார்கள். குறைந்தபட்சம், தற்காலிகமாக பணி நியமனம் செய்ய விரும்புவார்கள். ஆனால், இமாச்சலப் பிரதேசத்தில் நிலைமை வேறு. எண்ணிக்கையை 110 ஆகக் கூட குறைத்துவிடும்படி முதல்வர் கோரிக்கை விடுத்திருப்பார் என்கிறார்கள். ஆனால், காலியாக உள்ள இடங்களையே அவர் குறைக்குமாறு கேட்டுக்கொண்டதால் அதிகாரிகளைச் சமாளிக்க முடிந்திருக்கிறது. எந்த மாநிலமாக இருந்தாலும் அதிகாரிகள் மட்டத்தில் ஆட்குறைப்பு செய்ய முயற்சி எடுக்க மாட்டார்கள். வெள்ள நிவாரணப் பணிக்காக ஏகப்பட்ட அதிகாரிகள் தேவைப்படும் நேரத்தில், தனியார் நிறுவனங்களுக்கு இணையாக முதல்வர் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவது ஏன்?



