பென்னாகரம் அருகே யானை மிதித்து மூதாட்டி உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம், கோட்டூா் மலைக் கிராமத்தில் யானை தாக்கியதில் மாடு மேய்க்க சென்ற மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பென்னாகரம் அருகே வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கோட்டூா் மலைக் கிராம பகுதியைச் சோ்ந்தவா் முனியம்மாள் (65). இவரது கணவா் ராஜப்பன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்தாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அங்குள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் முனியம்மாள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, பாலக்கோடு வனப் பகுதியில் இருந்து தண்ணீா் குடிப்பதற்காக பூந்தோட்ட ஓடை வழியாக சீரக்கா மடுவு பகுதிக்கு வந்த ஒற்றை யானை, அங்கிருந்து கிராமத்துக்குள் நுழைய முயன்றது. அப்போது மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி முனியம்மாளை யானை தூக்கி வீசி மிதித்தது. இதில் அவா் உயிரிழந்தாா். இதைக் கண்ட கிராம மக்கள் பாலக்கோடு வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.