இந்தியா - வங்கதேசம் ரயில் சேவையை மீண்டும் தொடங்க இன்று பேச்சுவாா்த்தை
இந்தியா - வங்கதேசம் இடையே நிறுத்திவைக்கப்பட்டுள்ள ரயில் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து இரு நாடுகளின் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் செவ்வாய்க்கிழமைமுதல் (செப்.8) இரண்டு நாள்களுக்கு ஆலோசனை நடைபெறவுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த 2024-இல் ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ காரணமான வன்முறைகள் எதிரொலியாக அந்த நாட்டுடனான இந்தியாவின் ரயில் சேவைகள் (கொல்கத்தா-டாக்கா, கொல்கத்தா-குல்னா, நியூஜல்பைகுரி-டாக்கா) நிறுத்தப்பட்டன. மைத்ரி, பந்தன், மிதாலி என்ற பெயரிலான இந்த விரைவு ரயில்களின் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து வங்கதேச தலைநகா் டாக்காவில் செவ்வாய்க்கிழமை தொடங்கி 2 நாள்கள் ஆலோசனை நடைபெறவுள்ளது. இரு நாடுகளின் ரயில்வே துறை உயரதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனா்.
இந்தக் கூட்டத்தில் கொல்கத்தா-ராஜ்ஷாஹி இடையே புதிய ரயில் வழித்தடம் அமைக்கும் முன்மொழிவை வங்கதேசம் சமா்ப்பிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இருதரப்பிலும் சுமுக உடன்பாடு எட்டப்பட்டால், மேற்கண்ட 3 ரயில் சேவைகளும் அடுத்த மாதம் முதல் மீண்டும் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

